முகவுரை
அன்புடையீர்,
வணக்கம் . பள்ளி பருவத்தில் கவிதைகளை எழுதும் பழக்கம் உண்டு. கரந்தை தமிழ்ச் சங்கத்தில் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றேன் .
என்னுடைய கவிதைகள் அனைத்தும் யாருடைய மனத்தையும் புண்படுத்தக் கூடியதாக நினைக்க வேண்டாம். அது என்னுடைய நோக்கமும் அல்ல. அன்றாட மக்கள் வாழ்வில் நடக்கும் செயல்களின் பிரதி பலிப்பாக என்னுடைய கவிதைகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்தில் கருத்து வேறுபட்டிருக்கலாம். எப்படி இருந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் ஒரு சில கவிதைகள் பிடித்தமானதாக இருக்கக்கூடும் . கவிதை என் உள்ளக்குமுறலில் வெளிப்பட்டதாகும் .
இக்கவிதை லிசாவின் வெண்பா உதிரிப்பூக்கள் என்று பெயரிட்டுளேன் . இத்தொகுப்பில் சொல்விளையாட்டு உட்பட பல்வேறு கருப்பொருளில் உள் தலைப்புக்களில் வெண்பாவின் மூலம் கருத்துக்களைப் படைத்துள்ளேன்
எனவே என்னுடைய பணி சிறக்க தமிழ் பற்று உள்ளவர்கள் ஆதரவாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சா . சிவஜோதி பிலிட் ; பிஎட்
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (ஒய்வு)
1 கடவுள் வாழ்த்து
ஐங்கரன் வந்தெனக்கு நாளும் வழிகாட்டி
எங்கும் துணையிருப்பான் என்பதினால் - பொங்கும்
மகிழ்ச்சிப்பூத் தூவி வழிபடுவேன் நெஞ்சத்து
அகழ்விளக்கை ஏற்றி விடும்.
2 தொற்றுநோய் தொடமறுக்கும்
தன்னைத்தான் காக்கத் தனித்திரு தொற்றுநோய்
உன்னைத்தான் தொடமறுக்கும் என்தோழா - என்றும்
கொரானாபோல் எத்தொற்றும் தொற்றாமல் உன்னால்
தரணியும் காக்கப் படும் .
3 மனம்வைத்தால் உண்டு
அரசனும் ஆண்டவனும் பேரறி வானும்
சிரம்தாழ்த்தி வேண்டிடினும் தீரா - கொரானாவும்
விட்டொழித்து ஓடிட தன்னடக்கம் இல்லாத
முட்டாள் மனம்வைத்தால் உண்டு .
4 உணவை உடலேற்றால்
உண்ட உணவை உடலேற்றால் நன்றாகும்
பண்டுரைத்தத் தொல்லியல் கற்றுணர்ந்தால் - கற்பாகும்
கண்டபடி வாழ நினைக்கின் களவாகக்
கொண்டவர் வாழ்வே கொடிது .
5 சுற்றம் விடும்.
ஆசைக்கு அடிபணிந்து ஆணவம் பெற்றிங்கே
மாசினை செய்யும் மனிதனிடம் - பாசம்
அகம்இழக்கும் அன்பும் வெளியேறும் வாழ்வில்
சுகம்இழப்பான் சுற்றம் விடும்.
6 சேரும் பொருள்
அலைமனமே ஆசைக்கு அளவின்றி ஏங்கும்
நிலையேனோ ஆடாதே நீயும் - நிலையில்லை
சேர்த்தப் பொருள்நில்லா நீநினைத்தால் உன்னிடத்தில்
சேரும் பொருளொன்றே அன்பு.
7 காவிரித்தாய்
நாவற்ற மைந்தனைதான் பேச்சப்பன் என்றுரைப்பார்
பூவாதப் பெண்ணொருத்திப் பூங்கோதை - ஆவதாலே
கண்ணற்ற வேடனுந்தான் கண்ணப்பன் என்னவென்பேன்
மண்ணளக்கும் காவிரித்தாய் மாண்பு .
8 இன்பம் பெறலாம்
இறைவனைக் காண இதுதானே நேரம்
இயற்கையை வெல்ல எவருமே - இல்லை
இதயம் உடையோர் இருப்பதைத் தந்தாலே
இன்பம் பெறலாம் இனிது.
9 பிணிக்கு மருந்து.
உழைத்திட வேண்டும் உடல்நலம் பேண
குழைத்திடும் சோம்பல் உயிர்நீ - பிழைத்திட
வாழ்வில் வளம்பெற யோகாக் கலைக்கற்பின்
சூழும் பிணிக்கு மருந்து.
10 பாடாய் படுத்தும்
ஊழல் பெருக்கெடுக்க ஓநாய் நிறைந்திருக்க
பாழுங் கிணற்றில் பறிதவிக்கும் - வேழம்போல்
நாடெல்லாம் மக்கள் நலங்கெட்டு வாழ்ந்திட
பாடாய் படுத்தும் பணம்.
11 பணத்தாசை
பணத்தாசைப் பெற்றதொரு பாவி மனம்நற்
குணத்தைதான் பெற்றிடுவ தில்லை - பிணத்திற்கு
போதித்தால் பேதமையே மிஞ்சிடும் என்றறிந்தும்
வாதித்தால் என்ன பயன்.
12 மெய்யுலகில் நின்றிடுவாய்
வெறுமனே வந்தாய் வெறுமனே செல்வாய்
உறவும் உனதல்ல காண்பாய் - அறம்மட்டும்
செய்திடுவாய் அன்பினை ஊட்டிடுவாய் அன்றேதான்
மெய்யுலகில் நின்றிடுவாய் நீ.
13 அறம்மட்டும் செய்
பாரும் பரம்பொருளும் ஒன்றெனவே உள்ளுணர்வில்
பாரப்பா உண்மை புலனாகும் - யாருக்கும்
சொந்தமில்லை இவ்வுலகில் செய்த அறம்மட்டும்
பந்தமாகும் என்றும் உனக்கு.
14 தாவரம்
உயிர்க்காற்றைத் தந்தருளும் தாவரமே உன்றன்
உயிரெடுக்க மன்றாடும் மல்லர் - உயிரையும்
உன்மடித் தாலாட்டும் ஒப்பரியத் தேவனே
உன்னால் இயங்கும் உலகு.
15 வானம் பொழியும் விருந்து
தன்னை அறியாதான் தாயிழந்தப் பிள்ளையாம்
என்றும் தனியனாய்த் தானிருப்பான் - என்றுணரும்
ஞானம் உனக்கிருந்தால் போதுமப்பா உன்றனுக்கு
வானம் பொழியும் விருந்து.
16 அன்பில் வெற்றி வரும்
சித்தம் தடுமாற சீற்றம் தலைக்கேற
வித்தைப் பலவீனம் கண்டதம்மா - பித்தம்
தெளிந்தாலும் பேராண்மைக் கொண்டாலும் அன்பில்
விளித்திட வெற்றி வரும்.
17 சென்றவர் மீள்வரோ
சென்றவர் மீள்வரோச் சென்றவிடம் யாதறியோம்
நின்றவர் வாழ வகையறிக - சென்ற
இடத்தில் சிலையுண்டோ மண்டபம் உண்டோ
விடுத்த இடத்தில் எதற்கு.
18 ஈனப் பிறவி
உறங்காமல் உண்ணாமல் ஈவிரக்கம் இன்றி
தறிகெட்டுத் தாழ்தொழிலை செய்வான் - அறிவிலான்
ஆனமட்டும் சேர்த்ததுவோ கோடானக் கோடியெனில்
ஈனப் பிறவி எதற்கு.
19 என்ன பயனுண்டோ
நன்னூலைக் கற்றாலும் பட்டறிவுப் பெற்றாலும்
பன்னூல் மனதில் பதிந்தாலும் - என்றென்றும்
தன்னை உணராமல் தானும் தனித்திருந்தால்
என்ன பயனுண்டோ சொல்.
20 மதுவில் கிடைத்திடும் செல்வம்
நஞ்சுள்ளப் புட்டியிலே உண்டால் உயிர்பறிக்கும்
எஞ்சிய நாள்இழப்பீர் என்றெழுதி - தஞ்சம்
அடைந்தோர் தவித்திடக் கண்டால் மதுவில்
கிடைத்திடும் செல்வம் எதற்கு.
21 சுட்டதனால் தூய்மை உலகு.
தொட்டதனால் சுட்டெரித்தான் நாத்தனலில் தன்னுயிரை
விட்டதனால் உற்றார் உறவினரும் - எட்டநின்றார்
சுட்டவடு ஆறுமுன்னே தொட்டவனே கிட்டவந்து
சுட்டதனால் தூய்மை உலகு.
22 இளமை சென்றபின்
நாளை வருமென்று நாளும்தான் காத்திருந்தேன்
நாளும் வரவில்லை நானிலத்தில் - நாளையும்
இன்றாய் இருந்ததம்மா என்றென்றும் என்இளமை
சென்றபின் நொந்ததேன் நான் .
23 யார்தான் நண்பன்
யார்யார்தான் நண்பன் அறிந்திலையோ யார்மாட்டும்
தீராப் பழிச்சொல் பகர்ந்திடார் - கூர்மதியர்
நண்பரெனில் பார்விட்டுப் போனாலும் உன்றன் நற்
பண்பினை விட்டு விடார் .
24 அன்பு உனதானால்
சோம்பல் உனதானால் நோயும் உனதாகும்
வீம்பும் உனதானால் விரயம் - தாம்மிஞ்சும்
யாரிடத்தும் அன்பு உனதானால் என்றென்றும்
பேரும் புகழும் தரும்.
25 வாயடக்கம் தேவை
யோகாக் கலைக்கற்க உன்னுயிர்க் காக்குமே
ஓயா உழைப்பும் உடல்காக்கும் - தாயினும்
தாயாகத் தானிருந்து காப்பதற்கு தானும்தான்
வாயடக்கம் தேவை உனக்கு.
26 நீயாக இரு
நீயாகத் தானிருக்க நானெதற்கு வேண்டாமே
தாயெனினும் சேயெனினும் வேறன்றோ - வாயும்
வயிறுமோ ஒன்றல்ல தன்வினை தானே
செயலாக பட்டறியும் பார் .
27 பட்டறியும் காலம்
பட்டறியும் காலம் பழுத்திடுவாய் பண்டுநீ
கெட்ட வினை கேடென்று அறியுமுன்னே - பட்டவர்கள்
பாடறிந்த சொல்மறுத்து பாதை தடுமாறி
தேடும் பொருளுண்டோ சொல் .
28 உள்ளம் சுடும் .
பொய்யும் புரட்டும் திருட்டும் சுமந்தவன்
செய்யும் தொழினில் சேர்த்ததனை - துய்த்தலோ
தேள்கடி பட்டத் திருடன்கைப் போலுமே
நாள்தோறும் உள்ளம் சுடும் .
29 தூய்மையை தேடு.
உழைப்பின் பெருமை உணராதான் உள்ளம்
பிழைதேடும் பொய்யும் புரட்டும் - நிழல்தேடும்
கள்ளம் கபடம் தழைத்தோங்கும் என்பதனால்
துள்ளிடும் தூய்மையை தேடு.
30 விளையாப் பதர்
பெற்ற கடனிருக்கப் பெற்றோரைக் கைவிட்டான்
கற்ற கடனுக்கு என்செய்வான் - அற்ற
குளம்விட்டு ஒழிந்த பறவைபோல் உள்ளான்
விளைந்தும் விளையாப் பதர் .
31 பிழைப்பிற்கு ஏது வழி
ஊரார் உழைப்பில் உடல்வளர்க்கும் உத்தமனே
யாரிடம் யாசிப்பாய் ஊர்சுற்ற - பாரில்
உழைத்தும் உறுபசி வாட்டிட வாடுவோர்
பிழைப்பிற்கு ஏது வழி .
32 மண்டை கணமே விருந்து.
சிரம்தாழ்த்தித் தன்னிருக் கைகூப்பி ஓட்டைத்
தருமாறு கெஞ்சிப் புலம்ப - அருளுள்ளம்
கொண்டவன் இட்டதனால் பெற்ற திருஓட்டில்
மண்டை கணமே விருந்து.
33 தின்பது மண்.
யாரப்பன் ஆனாலும் உங்கப்பன் எங்கப்பன்
வீரப்பன் போல திரைமறைவில் - சூரப்பன்
என்றாலும் ஏழைச் சிரிப்பினைக் கொன்றவன்
தின்றதை தின்பது மண்.
34 தேடும் நிலையுண்டோ
கோடான கோடியென சேர்த்த வழியாதோ
நாடறிந்தால் நாட்டின் நலமன்றோ - ஈடேறும்
வாடினோர் வாழ்வும் வளமாக்கும் வேலையை
தேடும் நிலையுண்டோ சொல் .
35 தேடி வரும்.
மாபாவி தேநினைந்து உள்ளம் உருகிட்டால்
தேமா பொருள்தருவாள் பாதேவி - பாமாலை
சூட்ட பதம்தருவாள் தேவி வலுதருவாள்
நாட்டாண்மை தேடி வரும்.
36 வாடும் மனமே திருந்து.
பகலில் உறக்கம் இரவில் மறுக்கும்
அகத்தில் அரங்கேறும் நோயால் - சுகமிழக்க
கூடும் கொழுப்புடன் சக்கரை வந்தேற
வாடும் மனமே திருந்து.
37 வேதனை வென்றான்
கற்றதெல்லாம் போதவில்லை கால்கடுக்கக் காத்திருந்தான்
தொற்றுநோய்ப் போல தொடர்ந்ததேனோ - வெற்றுரைகள்
சாதிக்கக் கற்றான் கணிணியின் உட்புகுந்தான்
வேதனை வென்றான் விரைந்து.
38 வேரூன்ற எங்கே இடம்.
மழலைத்தேன் உண்டாய் மயக்கத்தில் நின்றாய்
பழுத்த கிழமேஉன் பாசம் – விழுதாகி
வேரூன்றி தாங்க நினைக்கினும் உன்றனுக்கு
வேரூன்ற எங்கே இடம்.
39 பட்டறிந்தோர் விலை
ஏடறிந்தேன் என்றெண்ணிப் பாடறிய மாட்டாதான்
வாடும் நிலைவரினே வாழ்வினை - நீடும்
நிலைத்திருக்கத் தானறியான் என்பதினால் பட்டறிந்தோர்
விலையோ அளவில்லை காண் .
40 தோன்றும் இறை.
காணாத தெய்வத்தைக் காணத் துடிக்கின்றாய்
வீணாக உள்ளம் தவிப்பதேன் - நாணினை
மீட்டினால் தானே இசையாகும் அன்பினை
ஊட்டிப்பார் தோன்றும் இறை.
41 வரிஏய்க்கும் கூட்டம்
கல்வித் தொழிற்சாலை கற்க விலைக்கேட்கும்
புல்லர் அறச்சாலை போதனை - கல்லும்
கரையும் முதலையின் கண்ணீரை போலும்
வரிஏய்க்கும் கூட்டம் எதற்கு.
` 42 மதவெறி ஒதுக்கு
மதமே வெறியாம் மதவெறி யாதோ
இதமே மதம்எனில் ஏனோ - எதுக்கோ
கலக்கம் பிணக்கம் கலந்த மனிதன்
உலுக்கும் செயலை ஒதுக்கு.
43 வாழ்த்திடும் வாழ்வு.